ஜாமெட்ரி பாக்ஸ்

சென்னை கோட்டூர்புரத்தில்  உள்ள மாநகராட்சி பூங்கா.

கவிதாவும் அவளது கணவன் ஸ்ரீகாந்தும் ஒவ்வொரு சனிக்கிழமையும் வாக்கிங் செய்வதற்காக அங்கு வருவது வழக்கம். ஆனால் கடந்த ஒரு மாதமாக அவர்களை தினமும் அங்கே பார்க்க முடிந்தது. காரணம் கவிதா எட்டு மாத கர்ப்பிணி. டாக்டரின் அறிவுரைப்படி தினமும் ஒரு  மணி நேரம் வாக்கிங் செய்யவேண்டியிருந்தது.

எப்பவும் போல அன்றும் வாக்கிங் முடித்துவிட்டு தங்கள் காரை நோக்கி நடந்து கொண்டிருந்தார்கள். "ஸ்ரீ, நான் உங்ககிட்ட தினமும் கேட்டுகிட்டே இருக்கேன். ஆனா இன்னும் நீங்க அவங்ககிட்ட கேக்கறதுக்கு தயங்கிகிட்டே இருக்கீங்க.. ஒரு வாரம் ஆயிடுச்சு. கேக்க போறீங்களா இல்லையா?"

அந்த பூங்காவை பராமரிக்கும் வாட்ச்மேன் மணிவண்ணன் அதனுள்ளேயே ஒரு சிறிய குடிசையில் குடியிருந்து வந்தார். உடன் அவரது மனைவி புஷ்பாவும், ஏழு வயது மகன் பாபுவும், பத்து நாட்களே நிரம்பியிருந்த ஒரு அழகான நாய்க்குட்டியும். நாய்குட்டிக்கு பாபு 'முன்னா' என்று பெயரிட்டிருந்தான்.

"இன்னிக்கு கண்டிப்பா கேட்டுடறேன் கவி..நீ போய் கார் ல உக்காரு..நான் இதோ வரேன்", என்று வாட்ச்மேனின் குடிசையை நோக்கி நடந்தான் ஸ்ரீகாந்த். "ஐயா, ஐயா ஒரு நிமஷம் இங்க வாங்களேன்" என்றான் மணிவண்ணனிடம். "சொல்லுங்க சார்.. இப்போலாம் தினமும் வரீங்க போல. அம்மா சௌக்கியமா? எங்க அவங்கள காணும்?".

"அவங்க நல்லா இருக்காங்க. அவங்க தான் ஆசைப்பட்டு ஒரு விஷயம் கேட்ருக்காங்க..அதான் உங்ககிட்ட பேச வந்தேன்..நீங்க வளர்க்கறீங்களே , அந்த நாய்க்குட்டி வேணுமாம். எங்க பிறக்க போற குழந்தைக்காக ஒரு துணையா அத வீட்டுல வளர்க்கணும்-னு ஆசைப்படறா.."

"அதுவா, அது சும்மா ரோடு ல ஒரு ஓரமா கெடந்துது னு போன வாரம் என் பையன் பாபு தூக்கிட்டு வந்தான். ஆனா இந்த ஒரு வாரத்துல அது கூட ரொம்ப பழகிட்டான். அவன்கிட்ட தான் கேக்கணும். இருங்க, கூப்படறேன்... டேய் பாபு இங்க வா!"

முன்னாவை தூக்கிக்கொண்டு ஓடி வந்தான் பாபு. உடல் முழுவதும் பளிச் வெள்ளையாகவும், வாலும் காதுகளும் மட்டும் கருப்பாகவும் பார்க்கவே கொள்ளை அழகாக கொழுகொழுவென்று இருந்தது முன்னா. "சொல்லு ப்பா.. என்ன வேணும்.."

"இந்த சாருக்கு உன்னோட நாய்க்குட்டி வேணுமாம்.. குடுப்பியா?"
"ஐயோ மாட்டேன் மாட்டேன்..முன்னா என்னோட உசிரு..தினமும் அவன் சாப்பிட்ட அப்பறம் தான் நான் சாப்பிடறேன்..தெரியுமா? நீங்க வேற ஏதாவது கேளுங்க அங்கிள்..முன்னாவை மட்டும் கேக்காதீங்க.."

ஸ்ரீகாந்த்-க்கு பாபு சொன்னதைக் கேட்ட பிறகு அந்த சிறுவனின் மனதை நோகடிக்க மனம் வரவில்லை. "சரி சரி..நீ கொஞ்சம் யோசிச்சு சொல்லு..நான் அப்பறம் வரேன்" என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டான். கவிதாவிடம் ஏதாவது சாக்கு சொல்லிக்கொள்ளலாம் என்ற துணிச்சலில்.

அடுத்த இரண்டு நாட்களுக்கு கவிதா ஸ்ரீகாந்திடம் ஒன்றுமே பேசவில்லை. கோவத்தின் மறு உருவமாக வீட்டில் நடமாடினாள். "வாக்கிங்-உம் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம். நான் எவ்ளோ ஆசைப்பட்டு கேக்கறேன். நம்ம குழந்தைக்காக இது கூட செய்ய மாட்டீங்களா?" என்ற புலம்பல் இன்னொரு பக்கம். "புள்ளத்தாச்சி பொண்ணு..ஆசைப்படுது ல தம்பி..கொஞ்சம் செஞ்சு தான் குடுங்களேன்" என்று வீட்டு வேலைக்காரி வேறு கூட சேர்ந்து ராகம் பாடினாள்.

ஒரு வாரம் பொறுத்துப் பார்த்தான் ஸ்ரீகாந்த். சரி, இன்று எப்படியாவது அந்த நாய்க்குட்டியை வீட்டுக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்ற முடிவுடன் பூங்காவிற்கு கிளம்பினான். தனியாக காரில்.

"ஐயா..மணிவண்ணன்..இருக்கீங்களா.."
"வாங்க சார்..என்ன உங்கள ஆளையே காணும்.. அன்னிக்கு கோவிச்சுக்கிட்டீங்களோ?"
"இல்ல இல்ல..ஆனா இன்னிக்கு அந்த நாய்க்குட்டி இல்லாம என்னால வீட்டுக்கு போக முடியாது. எப்படியாவது நீங்க தான் உங்க பையன் கிட்ட பேசி அந்த நாய்க்குட்டிய கொஞ்சம் வாங்கி தரணும். அதுக்கு நீங்க எவ்வளோ பணம் கேட்டாலும் நான் குடுக்க ரெடி."
"பணத்தை பத்தி இல்ல தம்பி..அவன் கொஞ்சம் பிடிவாதம் ஜாஸ்தி..சரி இருங்க..பேசி பாக்கறேன்.."

மணிவண்ணன் குடிசைக்குள் சென்றார். பாபு முன்னாவுடன் டிவியின் முன்பு உட்கார்ந்திருந்தான். அம்மா புஷ்பா ரெண்டாவது தோசையை எடுத்து வந்து பாபுவின் தட்டில் வைத்துவிட்டு அருகில் அமர்ந்தாள். "டேய் பாபு..அன்னிக்கு வந்தாரே..அந்த சார் திருப்பி வந்துருக்காரு..பாவம் பெரிய இடத்து மனுஷன்..திருப்பி திருப்பி கேக்கறாரு..அந்த நாய்க்குட்டிய குடுத்துருடா ..நமக்கு வேற ஒன்னு எங்கயாச்சும் கிடைக்கும்.."
"அப்பா..தரமாட்டேன்.. என் முன்னாவை பிரிஞ்சு என்னால இருக்க முடியாது.."
"புஷ்பா..கொஞ்சம் சொல்லு டி..அவரு பணம் வேற தரேன்-னு சொல்றாரு..இந்த மாசம் இவனுக்கு இஸ்கூல் பீஸ் வேற கட்ட காசு இல்ல னு சொன்னே-ல.."

புஷ்பாவிற்கும் நடந்தது எல்லாம் தெரிந்திருந்தது. "பாபு..ஆமா..பீஸ் கட்டணும்..நீ ஏதோ புது ஜாமற்றி (geometry ) பாக்ஸ் வேற வேணும்னு சொன்னே ல..ஒழுங்கா அந்த அழுக்கு புடிச்ச நாய்க்குட்டிய குடுத்தா இதெல்லாம் கிடைக்கும்..குடுத்துரு.." என்று பேசிக்கொண்டே முன்னாவை பாபுவின் கையிலிருந்து பிடுங்கினாள் புஷ்பா.
"இந்தாய்யா ..இத குடுத்துட்டு அவரு குடுக்கற காசை என்கிட்ட கொண்டாந்து குடு..நைசா அதுல கொஞ்சம் காசு இசுக்கலாம்-னு பாக்காத..என்ன?" என்று மிரட்டிக்கொண்டே மணிவண்ணனிடம் முன்னாவை கொடுத்தாள்.
பாபுவிற்கு கண்ணிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் கொட்ட ஆரம்பித்தது. இருந்தாலும் அம்மா கோவக்காரர். மறுவார்த்தை பேசினால் அன்று இரவு முழுவதும் அடி வாங்க வேண்டியது தான். அழுது கொண்டே குடிசையின் வாசலை இரண்டு கைகளால் பிடித்துக்கொண்டு ஏக்கத்துடன் வெளியில் எட்டிப்பார்த்தான்.

மணிவண்ணன் நாய்க்குட்டியை கொடுத்துவிட்டு கையில் ஒரு ஐநூறு ருபாய் நோட்டுடன் குடிசைக்கு திரும்பிக்கொண்டிருந்தார். "இந்த மாசம் பிரச்சனை முடிஞ்சுது ரா பாபு..நான் உனக்கு வேற நாய்க்குட்டி புடிச்சு கொண்டுவந்து தரேன்..என்ன?" என்று அவனை லேசாக தட்டிக்கொடுத்து உள்ளே சென்றார் மணிவண்ணன்.

சில வருடங்கள் கடந்தன.

ஐந்து வருடங்களுக்கு பிறகு, கவிதாவும் ஸ்ரீகாந்தும் மீண்டும் அந்த பூங்காவிற்கு வந்தனர். இம்முறை அவர்களது ஐந்து வயது மகள் திவ்யாவும் உடன் இருந்தாள். அவர்களுடன் காலர் கட்டப்பட்ட சிம்பா வேகமாக நடந்து வந்தது.

பன்னிரெண்டு வயது பாபு பூங்காவின் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தான். உடன் அவனது நான்கு வயது தங்கை பவானியும் இருந்தாள். சிம்பாவைப் பார்த்ததும் அடையாளம் கண்டு கொண்டான் பாபு. அது அவனது முன்னா தான். வாலும் காதுகளும் மட்டும் கருப்பாக இருந்ததே. சிம்பாவிற்கும் பாபுவிடம் ஏதோ ஒரு ஈர்ப்பு தோன்றியது. அவன் அருகே ஓடிப் போய் வாலாட்டிக்கொண்டே நின்றது.

"அப்பா..அங்க பாருங்க..சிம்பா அந்த அண்ணாவை பார்த்து வாலாட்டுது..தெரிஞ்சவங்க கிட்ட மட்டும் தான் நாய் வாலாட்டும்-னு என்கிட்ட சொன்னீங்களே? பொய் சொன்னீங்களா?" என்று திவ்யா சுட்டியாக கேள்வியைக் கேட்டுவிட்டு சற்று முன் காலியான ஊஞ்சலை நோக்கி ஓடினாள் . கவிதாவும், ஸ்ரீகாந்தும் ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு, சிம்பாவை கயிற்றால் இறுகப்பிடித்துக் கொண்டு நடக்கத்தொடங்கினர்,

இப்படியே ஒரு வாரம் சென்றது. தினமும் திவ்யாவுடன் பூங்காவிற்கு வந்த சிம்பாவிற்கு பாபு பிஸ்கட் போடுவது வழக்கமாயிற்று. கவிதாவும், ஸ்ரீகாந்தும் அவ்வளவாக கண்டு கொள்ளவில்லை. வாக்கிங் முடியும்வரை நாயைப் பார்த்துக்கொள்ள இலவசமாக ஆள் கிடைத்தது என்ற எண்ணத்தில் இருந்தனர்.

ஒரு நாள் வாக்கிங்-கை  முடித்து கொண்டு மூவரும் கிளம்பும்போது, திடீரென்று திவ்யா, "அப்பா..ஒரு நிமிஷம் நில்லுங்க.." என்று சொல்லிவிட்டு, சிம்பாவை பிடித்து இழுத்துக்கொண்டு பாபுவை நோக்கி நடந்தாள்.

"அண்ணா.. நாங்க அடுத்த வாரம் வெளிநாட்டுக்கு போறோம்..எங்க அப்பாவுக்கு அங்க வேலை கெடச்சிடுச்சு, ஆனா சிம்பாவை எங்களால கூட்டிகிட்டு போக முடியாது.. இங்கயே ப்ளூ கிராஸ் ல விட்டுடலாம்-னு  அம்மாவும் அப்பாவும் சொல்றாங்க..ஆனா எனக்கு அது இஷ்டம் இல்லை..நீங்க தான் சிம்பா கூட நல்ல ப்ரெண்ட்ஸ் (friends) ஆயிட்டீங்களே..அதுனால நீங்களே பாத்துக்கறீங்களா இவன?" என்று பட படவென சொல்லி முடித்து நிறுத்தினாள் திவ்யா. அவளது சிறிய வயதிற்கு இவ்வளவு பேச்சு வருகிறதே என்ற வியப்பில் அவளது பின்னால் நின்று கொண்டிருந்தான் ஸ்ரீகாந்த்.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த பவானி உடனே குடிசைக்குள் ஓடினாள். திரும்பி வெளியே வரும்பொழுது அவளது கையில் ஒரு gift wrap செய்யப்பட்ட பொருள் இருந்தது. சென்ற வாரம் பாட்டுப் போட்டியில் பாபுவிற்கு கிடைத்த முதல் பரிசு,  "நாங்க இந்த நாயை பாத்துக்கறோம்..இத எங்களுக்கு குடுத்தே இல்ல..அதுனால இந்தா..இத நீ வெச்சுக்கோ.." என்று திவ்யாவின் கையில் அந்த பொருளைத் திணித்தாள் பவானி.

அது என்னவாக இருக்கும் என்று உடனே பிரித்துப் பார்த்தாள் திவ்யா. உள்ளே ஒரு புதிய ஜாமெட்ரி பாக்ஸ் இருந்தது. ஐந்து வயது திவ்யாவிற்கு அது என்ன என்றே புரியவில்லை. ஆனால் இதையெல்லாம் பார்த்துகொண்டிருந்த ஸ்ரீகாந்துக்கு எல்லாமே புரிந்தது போல தோன்றியது.

தன்னுடைய முன்னாவிற்காக புதிய பிஸ்கட் பாக்கெட்டை பிரித்தான் பாபு. திவ்யாவின் கையை பிடித்துக் கொண்டு காரை நோக்கி நடந்தான் ஸ்ரீகாந்த். இம்முறை கவிதாவிடம் எந்த சாக்கும் சொல்ல வேண்டியதில்லை.





Comments

  1. Nice one Hari!!! Keep up ������!!!

    ReplyDelete
  2. Very Nice Story... Keep Going hp......!!!

    ReplyDelete
    Replies
    1. Thank you mozhi. Good to know you read it :)

      Delete
  3. வணக்கம் ப்ரியா அக்கா, நீண்ட நாட்களுக்கு மன்னிக்கவும் வருடத்துக்கு பிறகு ஒரு பிளாக் படித்துள்ளேன். அதுவும் மிக அருமையான கதை. இதை படிக்கும்போதுதான் எனது தளத்தில் மீண்டும் எழுதவேண்டும் என்று தோன்றுகிறது. நன்றி.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

13 self-written quotes that help me #BeAlive

What can I (and we) do before another Nirbhaya or Swathi?

When does she stop dreaming?