வானவில்

ஜூன் மாதம். அன்று வரை காலை எட்டு மணியளவில் வெறிச்சோடி இருந்த சாலைகள் மீண்டும் களை கட்ட ஆரம்பித்தன. இரண்டு மாத கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறந்தாகிவிட்டன.

அப்பாவின் பைக்கில் ஜம்மென்று ஏறி அமர்ந்து, புத்தம் புது உற்சாகத்துடன் பள்ளிக்கூட வாசலில் வந்து இறங்கினான் கிருஷ்ணா. 

"லஞ்ச் ஒழுங்கா சாப்பிடு. மார்க் ஷீட் குடுப்பாங்க..மறக்காம எடுத்துக்கிட்டு வா..ஆல் தி பெஸ்ட் கிருஷ்ணா" என்று அவனது கன்னத்தில் ஆசையாக ஒரு முத்தம் வைத்து, அவன் உள்ளே நடந்து செல்லும்வரை காத்திருந்து பின் கிளம்பினான் கிருஷ்ணாவின் அப்பா வாசு. 

நான்காம் வகுப்பு 'A' பிரிவு. பத்து வயது கிருஷ்ணாவிற்கு மனதுக்குள் ஒரே சந்தோஷம். பள்ளிக்கூடம் திறக்கும் அந்த முதல் நாள் அன்று புதிதாக பல மாணவர்கள் வகுப்பில் சேருவார்கள். இந்த முறை அவர்களில் யாராவது ஒருவரை நமது பெஸ்ட் ப்ரெண்ட்  ஆக்கிக் கொள்ளவேண்டும் என்று மனதுக்குள்ளேயே கணக்கு போட்டுக் கொண்டிருந்தான்.

படி ஏறி தனது வகுப்பு எது என்று ஒவ்வொரு அறையாக கடந்து கடைசியில் வந்து சேர்ந்தான். Class 4-A என்று புதிய பலகை வகுப்பின் வாசலில் மாட்டப்பட்டிருந்தது. ஒரு சில மாணவர்கள் மட்டுமே வந்திருந்தனர். ஆனால் யாரும் முதல் வரிசையில் அமரவில்லை. "ஹய்யா ஜாலி, முதல் வரிசை நமக்கு தான்" என்று மனதுக்குள் கும்மாளமிட்டுக் கொண்டு புத்தகப்பையை வைத்துவிட்டு அமர்ந்தான். ஒரு நிமிடம் பின்னால் திரும்பிப் பார்த்தான்.

இரண்டாவது வரிசையில், ஒல்லியாக கண்ணாடி இட்டுக்கொண்டு கையில் ஒரு புதிய பென்சில் ஒன்றை வைத்து மேசையின் மீது வரைந்துக் கொண்டிருந்தான் புதிதாக சேர்ந்திருந்த அந்த மாணவன். கிருஷ்ணா அவனிடம் "என் பேர் கிருஷ்ணா. உன் பேர் என்ன? புதுசா சேர்ந்திருக்கியா? இதுக்கு முன்னாடி எந்த ஸ்கூல்ல  படிச்சே?" என்று சரமாரியாக கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தான். ஆனால் எந்த பதிலும் வரவில்லை. அவன் கையிலிருந்த பென்சில் மேசையோடு உரையாடிக்கொண்டே இருந்ததே தவிர, அந்த மாணவன் எந்த உரையாடலுக்கும் தயாரில்லை என்பது போல் அமர்ந்திருந்தான். கிருஷ்ணா நொந்து போய் அவனது இருக்கைக்கு திரும்பி, அந்த வருடத்திற்கான புதிய புத்தகங்களைப் புரட்ட ஆரம்பித்தான்.

அன்று முதல் பாடவகுப்பில் ஆசிரியர் வருகைப்பதிவு செய்யும்பொழுது கவனித்தான் கிருஷ்ணா. அந்த புதியதாக சேர்ந்த மாணவனின் பெயர் விக்னேஷ் என்று.

சிறிது நாட்கள் கடந்தன. விக்னேஷ் யாரிடமும் அதிகம் பேசுவதில்லை. அவனுக்கென்று ஒரு உலகம் அமைத்து அதில் தனியாக பயணித்துக் கொண்டிருந்தான். கிருஷ்ணா மதிய உணவு நேரங்களில் விக்னேஷுடன் உணவு உண்பது வழக்கமாயிற்று. இருவரும் ஓரளவுக்கு நண்பர்கள் ஆனார்கள். கிருஷ்ணா தினமும் வீட்டில் விக்னேஷை பற்றி பேசிக்கொண்டே இருப்பான்.

வகுப்பில் பல விஷமக்கார மாணவர்களுக்கு விக்னேஷ் தான் கேலிப்பொருள். அவனிடம் சத்தமாக பேசினால் அவனுக்கு பிடிக்காது. பல முறை மற்ற மாணவர்கள் அப்படி பேசும்போது விக்னேஷ் காதை மூடிக்கொண்டு கண்ணை இறுக மூடிக்கொண்டு ஒரு மூலையில் சென்று அமர்ந்து கொள்வான். அவனுடைய இந்த நடவடிக்கைகள் கிருஷ்ணாவிற்கு வித்யாசமாக தோன்றியது. அவனால் இதை  புரிந்து கொள்ள முடியவில்லை.

ஒரு நாள் பள்ளிக்கூடம் முடிந்து வீட்டுக்கு நடந்து செல்லும்போது, "அம்மா.. இன்னிக்கு விக்னேஷ் homework எழுதாம வந்துட்டான் மா. ஆனா டீச்சர் அவனை திட்டவே இல்ல. எதுவுமே சொல்லல. உன் parents -அ கூட்டிகிட்டு வா அப்படின்னு மட்டும் சொல்லிட்டு உக்கார சொல்லிட்டாங்க.ஆனா மத்தவங்கள எல்லாம் திட்டினாங்க. அவன மட்டும் ஏன் திட்டல?" என்றான் கிருஷ்ணா, அம்மாவிடம்.

கிருஷ்ணாவின் அம்மாவுக்கு அவன் விக்னேஷைப் பற்றி பேசுவதெல்லாம் கேட்கும்பொழுது மனதுக்குள் ஒரு சந்தேகம் பிறந்தது. "இன்னிக்கு எப்படியாவது வாசு-கிட்ட இதை பத்தி பேசியே ஆகணும்" என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டே நடந்தாள்.

அன்று இரவு உணவு முடிந்து, அவர்களது அறையில் வாசு புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தான். மல்லிகா அவனருகே சென்று அமர்ந்து, "வாசு.. நம்ம கிருஷ்ணா அடிக்கடி இந்த விக்னேஷ்-ன்ற பையனை பத்தி நம்மகிட்ட சொல்றானே.. கேட்டிருக்கீங்க-ல?"

"ஆமாம் மல்லிகா..இப்போ என்ன அதுக்கு? இந்த book -அ ரொம்ப சீரியஸ்-ஆ படிச்சிக்கிட்டு இருக்கேன். இப்போ இந்த topic ரொம்ப அவசியமா?

"ஆமாம் வாசு..அதை விட இது முக்கியம்."

"சரி.சொல்லு..என்ன ஆச்சு அந்த பையனுக்கு?"

"அந்த பையனுக்கு ஒன்னும் ஆகல.. ஆனா அவன் கூட ரொம்ப பழகினா, நம்ம கிருஷ்ணாவுக்கு தான் ஏதாவது ஆகிடுமோ-னு  தோணுது.."

"என்ன டி ஒளர்ற? அவன் கூட friends -ஆ இருந்தா இவனுக்கு என்ன ஆகும்? சின்ன பசங்க தானே?"

"இல்லங்க..அவனை பத்தி இவன் சொல்றதெல்லாம் யோசிச்சு பாருங்க.. திடீர்-னு கத்துவானாம்.. திடீர்-னு பேசவே மாட்டானாம்.. தானா சொந்தமா toilet-கு  போகமாட்டானாம்.. அடிக்கடி ரொம்ப நாள் லீவ் போடுவானாம்.. நேத்திக்கு கூட homework பண்ணலையாம்..ஆனாலும் டீச்சர் ஒண்ணுமே சொல்லலையாம்..இதெல்லாம் எனக்கு என்னவோ சரி-னு படல..அவங்க கிளாஸ் டீச்சர் கிட்ட போய்  பேசனுங்க.. நீங்களும் வாங்க.."

"மல்லிகா ..ஏதாவது  சின்ன விஷயத்த எல்லாம் பெரியதாக்கி நீயே மனசை போட்டு குழப்பிக்காதே. ஒவ்வொரு பசங்களும் ஒவ்வொரு மாதிரி..அதுல அந்த பையன் அந்த மாதிரி..அவ்வளவு தான்.. யோசிக்காம படுத்து தூங்கு.."

ஆனால் மல்லிகாவுக்கு தூக்கமே இல்லை. நாளை எப்படியாவது டீச்சரிடம் இதைப் பற்றி பேச வேண்டும் என்று முடிவு செய்தாள் .

அடுத்த நாள், இரவு உணவு முடிந்ததும் கிருஷ்ணா அவனது அறையில் உறங்க சென்றான்.

"வாசு..உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்..இன்னிக்கு கிருஷ்ணாவோட டீச்சர் கிட்ட பேசினேன்."

"ஹப்பா..நீ ஒன்னு நெனச்சா அத எப்படியாவது செஞ்சிடுவியே..என்ன பேசின? என்ன சொன்னாங்க?"

"அந்த விக்னேஷ்-கு ஏதோ health ப்ராப்ளம் இருக்காம்.அதாவது மத்த குழந்தைங்க அளவுக்கு மூளை வளர்ச்சி இல்லையாம்..அதுக்கு ஏதோ கஷ்டமான வார்த்தை சொன்னாங்க..எனக்கு புரியல..ஆனா ரெகுலர் ஸ்கூல் ல அவனை சேர்க்க சொல்லி டாக்டர்ஸ் சொன்னதுனால இங்க சேர்த்துருக்காங்க.."

"ஓஹோ.. சரி..இதுல என்ன இருக்கு?"

"அட..என்ன இப்படி சாதாரணமா சொல்லிட்டீங்க? நம்ம கிருஷ்ணா வேற அவன் தான் என் உயிர் நண்பன்-னு  சொல்லிக்கிட்டு திரியறான்.. அந்த பையன் கூட சேர்ந்தா  இவனுக்கு ஏதாவது ஆகிடுமோ-னு பயமா இருக்கு.." என்றாள் மல்லிகா பதட்டத்துடன்.

அந்த உரையாடல் மெல்ல முடிய, அன்று இரவு முழுவதும் வாசுவிற்கு உறக்கமே வரவில்லை. மல்லிகா சொல்வது ஒரு வேளை நியாயமானதாக  இருக்குமோ என்ற கேள்வி அவனை வதைத்துக் கொண்டே இருந்தது.

காலையில் எழுந்ததும், "மல்லிகா, இன்னிக்கு கிருஷ்ணாவை பள்ளிகூடத்துல விட போகும்போது நீயும் என் கூட வா. நீ சொன்ன மாதிரியே அவன் டீச்சர் கிட்ட பேசிடுவோம்."

அன்று கிருஷ்ணாவை பள்ளிக்கூடத்தில் விட்டு விட்டு, வாசுவும் மல்லிகாவும் டீச்சரிடம் பேசினர்.

அப்படியே நாட்கள் கடந்தன. வழக்கம் போல் விக்னேஷைப் பற்றி கிருஷ்ணாவின் தினசரி கதைகளும் தொடர்ந்தன. அவர்களது நட்பு மிகவும் வலுத்திருந்தது.

இறுதி ஆண்டு பரீட்சை முடிந்து, கோடை விடுமுறை தொடங்கியது.

"அம்மா..இன்னிக்காவது விக்னேஷ் வீட்டுக்கு போலாம் மா. அவன் ரொம்ப நாளா கூப்பிட்டுகிட்டே இருக்கான். நீங்க அனுமதிக்கவே மாட்டேன்-றீங்க " என்று கிருஷ்ணா எவ்வளவு சொல்லியும் மல்லிகா கண்டிப்பாக போக கூடாது என்று மறுத்துவிட்டாள். அடுத்த நாளே ஒரு பெட்டியில் கிருஷ்ணாவின் துணிகளை எடுத்துவைத்து, "இந்த முறை நீ போய் பாட்டி வீட்டுல இருந்துட்டு வா..அங்க போனா உனக்கு நல்லா பொழுது போகும்..அந்த விக்னேஷ்-அ பத்தியே எப்போவும் பேசிகிட்டு இருக்க மாட்டே.. எனக்கும் நிம்மதியா இருக்கும்.." என்று சொல்லி பெட்டியை மூடினாள் .

அன்று இரவு வாசுவும், மல்லிகாவும், கிருஷ்ணாவும் பேருந்தில் வந்தவாசியில் உள்ள அவனது பாட்டி வீட்டுக்கு சென்றார்கள். இரண்டு நாட்கள் கழித்து, கிருஷ்ணாவை அங்கேயே விடுமுறையை கழிக்கச் சொல்லிவிட்டு இவர்கள் ஊருக்குத் திரும்பினார்கள்.

விடுமுறையும் முடிந்து அடுத்த ஆண்டுக்கான வகுப்புகள்  தொடங்கின . விடுமுறை முழுக்க விக்னேஷ்-ஐ பார்க்க முடியாமல் தவித்த கிருஷ்ணா, உற்சாகத்தோடு பள்ளிக்குச்  சென்றான். ஐந்தாம் வகுப்பு C பிரிவு. வகுப்பறையில் நுழைந்து முதல் வரிசையில் அமர்ந்து விக்னேஷ் வருவதற்காக காத்திருந்தான். ஆனால் ஏமாற்றம் தான் மிஞ்சியது. அன்று முழுவதும் விக்னேஷ் வரவே இல்லை. "சரி..நாளைக்கு வருவானா இருக்கும்.." என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டே பள்ளிக்கூடம் வர, அப்படியே ஒரு வாரமும் கடந்தது.

"மிஸ்..என் friend விக்னேஷ் ஏன் மிஸ் இந்த வருஷம் ஸ்கூல்-க்கு வரல?" என்று ஏக்கத்துடன் டீச்சரிடம் இடைவேளையின் போது சென்று கேட்டான்.

"அவன் வரமாட்டான் கிருஷ்ணா. அவன் வேற ஸ்கூல் போயிட்டான்-னு  நினைக்கறேன். எங்க-னு  சரியா தெரியல. அவன் அம்மா அப்பா அதை பத்தி ஒன்னும் சொல்லல.TC  மட்டும் வாங்கிக்கிட்டு போயிட்டாங்க."

அன்று மாலை வீட்டுக்கு சென்ற கிருஷ்ணாவிடம் அம்மா, "என்ன டா .. இன்னிக்கு ஸ்கூல்-ல என்ன சொல்லி குடுத்தாங்க? எப்போவும் நோட் புக்  எடுத்து காண்பிப்பியே .. இன்னிக்கு அமைதியா இருக்க? டீச்சர் கிட்ட ஏதாவது  திட்டு வாங்கினியா?"

"அதெல்லாம் இல்ல அம்மா..இன்னிக்கு தமிழ் வகுப்பு-ல கடிதம் எழுதறது எப்படின்னு சொல்லிக் கொடுத்தாங்க. இதோ எழுதியிருக்கேன் பாருங்க.." என்று கூறிவிட்டு நோட்புக்கை எடுத்து மல்லிகாவிடம் கொடுத்துவிட்டு எங்கோ ஓடினான்.

அதில் எழுதியிருப்பதை படிக்கத் துவங்கினாள் மல்லிகா..

"அன்புள்ள விக்னேஷ்,

நான் இங்கு நலம். நீ அங்கு நலமா?
நீ இந்த வருடம் பள்ளிக்கூடம் வராததால் எனக்கு மிகவும் சோகமாக உள்ளது. நீ தான் என் உயிர்  நண்பன். ஆனால் அம்மா, அப்பாவுக்கு உன்னை ஏன் பிடிக்கவில்லை என்று தெரியவில்லை...."

இரண்டு வரிகள் படித்ததும் மல்லிகா அமைதியானாள்.  ஒரு சிறிய அதிர்ச்சி. தொடர்ந்து மனதுக்குள் வாசித்தாள்.

"அன்று ஒரு நாள் என்னுடைய அம்மாவும் அப்பாவும் டீச்சரிடம் பேசியதை நான் கேட்டேன். நீ வித்தியாசமானவன். எங்கள் எல்லோரையும் போல நீ இல்லை. அதனால் எங்கள் பள்ளியில் உன்னை படிக்க வைக்க கூடாது. உன்னால் எங்களுக்கெல்லாம் ஏதாவது  பிரச்சனை வரும் என்று சொன்னார்கள். ஒரு வேளை அதனால் தான் நீ வேற பள்ளிக்கூடம் சென்று விட்டாயா?

எனக்கு புரியவில்லை. புடவை கடைக்கு போனால் அம்மா வித்தியாசமான டிசைன் காண்பிக்க சொல்கிறார். தினமும் வீட்டு வாசலில் வித்தியாசமான கோலம் போடவேண்டும் என்கிறார் எனது பாட்டி. அப்பா தினமும் காலை சிற்றுண்டிக்கு வித்தியாசமான டிஷஸ் வேண்டும் என்கிறார்  . பள்ளிப்படிப்பு முடித்ததும் கல்லூரியில் வித்தியாசமான படிப்பு படிக்க வேண்டும் என்கிறார். வித்தியாசமான படம் வந்தா தான் சினிமா தியேட்டருக்கு கூட்டிக்கிட்டு போவேன் என்கிறார். நீ மட்டும் வித்தியாசமாக இருப்பது அவர்களுக்கு ஏன் பிடிக்கவில்லை என்று தெரியவில்லை.

என்னால் உனக்கு இந்த கடிதத்தை அனுப்ப முடியாது. உன் முகவரி என்னிடம் இல்லை. இருந்தாலும் அடுத்த வருடம்  நம் பள்ளியிலேயே நீ மீண்டும் வந்து சேர வேண்டும் என்று கடவுளை தினமும் வேண்டிக்கொள்கிறேன்.

உன் பெற்றோருக்கு என் வணக்கங்கள்.

இப்படிக்கு,
உன் உயிர் நண்பன்
கிருஷ்ணா

****

மல்லிகா நோட்டு புத்தகத்தை மூடிவிட்டு, நிமிர்ந்து பார்த்தாள். அறையின் மற்றொரு பக்கம் சுவரில் மாட்டியிருந்த விநாயகர் படத்தின் முன் கண்ணை மூடி, கையை சேர்த்து வைத்து ஏதோ முணுமுணுத்துக்   கொண்டிருந்தான் கிருஷ்ணா.



 ****************************************************************************
மீண்டும் வேறொரு கதையுடன் விரைவில் சந்திப்போம். காத்திருங்கள். இப்படிக்கு,
உங்கள் ஹரி 

Comments

  1. கதை கரு நன்றாக உள்ளது. வசன நடையை மேலும் மெருகேற்றலாம் என்று நினைக்கிறேன். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. Heart touching, feeling nostalgic... Reminds me of my friend whom I lost while in the process of changing schools during my fifth standard... Good read

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

13 self-written quotes that help me #BeAlive

What can I (and we) do before another Nirbhaya or Swathi?

When does she stop dreaming?